மோசமான உலக சாதனை படைத்த பதிரனா
ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 8 ஆவது போட்டியில் இலங்கையை 6 இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் 2 ஆவது வெற்றியை பதிவு செய்தது.
அப்போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களிடம் அடி வாங்கிய இலங்கை பந்துவீச்சாளர்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் மதீஸா பதிரனா உச்சகட்டமாக ஓட்டங்களை வாரி வழங்கி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
குறிப்பாக 9 பந்துப்பரிமாற்றங்களை மட்டுமே வீசிய அவர் அதில் ஒரு இலக்கினை வீழ்த்தி இருந்தாலும் 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
அதை விட இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாக விளையாடும் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் 10 பந்துப்பரிமாற்றங்களை வீசி 95 ஓட்டங்களை வாரி வழங்கினார்.
இந்நிலையில் அவர் 48 வருட உலகக் கிண்ண வரலாற்றில் தங்களுடைய முதல் 2 போட்டிகளில் 90 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான உலக சாதனையை படைத்துள்ளார்.