வெளிநாட்டு பிரஜை ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து வன்முறை கும்பல் அட்டூழியம்! 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டு பிரஜை ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து வன்முறை கும்பல் அட்டூழியம்! 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிறு கொடுக்கல் வாங்கல் தாக்குதல் நடத்துமளவிற்கு வழியமைதுள்ளது.

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் வெட்டியதாகவும், தடுத்த பெண்ணுக்கும் தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இளைஞர் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து, நள்ளிரவு 20க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவருக்கும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் CCTV கமெராக்கள், மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி அழித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கி பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பெற்றோல் குண்டும் தயாரித்து வீசப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் வெட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளார்.

அவரது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே சிகிச்சை பெற்று வருவதுடன், வெளிநாட்டு பிரஜைக்கும், அவரது மனைவிக்கும் தாக்குதல் மேற்கொண்டமையால் சிறு உபாதைக்குள்ளாகியுள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிசார் ஆரம்பித்து முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சந்தேக நபர்களில் பலர் கடந்த காலங்களில் வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் சட்டவிரோத மண்ணகழ்வு இடம்பெறுகின்றமை தொடர்பில் குறித்த குடும்பம் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

தாக்குதல் மேற்கொண்ட குறித்த குழுவில் மண் மாபியாக்களே அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது குறித்த மணல் அகழ்வு முற்றாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவமானது பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு