சொந்த மண்ணில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு! ரவிகரன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
சொந்த மண்ணில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை மறுப்பு! ரவிகரன் காட்டம்..

எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது எனவும், குருந்தூர்மலையில் தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை  மறுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் எத்தகைய கொடிய அரசின் கீழ் எமது தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை உலகநாடுகள் பார்க்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பௌத்த பிக்குகளும், பெரும்பாண்மை இனத்தவர்களும் பெருமளவில் குருந்தூர்மலைப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

நாம் பொங்கல் வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தபோது,  பெரும்பாண்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் எமது பொங்கல் வழிபாட்டுக்குரிய செயற்பாடுகளைக் குழப்புகின்றவகையில் செயற்பட்டனர்.

இந் நிலையில் அங்கு கடமையிலிருந்த பொலிசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியவாறு இருந்து.

இந் நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நாம் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

அந்தவகையில் தொல்லியல் பிரதேசத்திற்குள் 'தீ' வைக்க முடியாது எனக் கூறிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள்,  நிலத்திலே தகரங்களை வைத்து,  அதன்மேல் கற்களை வைத்து, கற்களின்மேல் தகரங்களை வைத்து தீவைத்து பொங்கல் மேற்கொள்ள முடியுமென நிபந்தனைகளுடன் பொங்கல் வழிபாட்டிற்கு அனுமதித்திருந்தனர்.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தினுடைய நிபந்தனைகளுக்கு அமைவாக, பொங்கல் மேற்கொள்வதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம். 

அப்போதும் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்களாலும், பௌத்ததேரர்களாலும் அங்கு எமது பொங்கல் வழிபாடுகளுக்கு குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.

இந் நிலையில் பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகவே பொலிசாருடைய செயற்பாடுகள் காணப்பட்டன. பொலிசாருடைய செயற்பாடுகள் மிக மோசமாக காணப்பட்டன.

எங்களுடைய இடத்தில், எமது மக்கள், தமது வழிபாட்டினை மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது. எமது மக்களின் வழிபாட்டுரிமை இங்கு மறுக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பலதடவைகள் இந்த நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும் சர்வதேசநாடுகள்கூட தொடர்ந்தும் இவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறான கொடுமையான அரசாங்கத்தின் கீழ்தான் எமது மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை இந்த உலக நாடுகள் பார்க்கவேண்டும்.

இங்கே பொலிசார் எமது தமிழ் மக்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். எமக்கெதிராக அடக்கு முறைகளைக் கையிண்டனர். ஆனால் பௌத்த துறவிகளுக்கு எதிராகவோ, பெரும்பாண்மை மக்களுக்கு எதிராகவோ அவர்கள் அடக்கு முறைகளைக் கையாளவில்லை.

எம்மால் இங்கு பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் நாம் இதனை இவ்வாறே விட்டுவிடப்போவதில்லை.

நாம் தொடர்ந்தும் இங்கு வந்து எமது வழிபாடுகளை மேற்கொள்வோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு