யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஹெரோயின் கடத்திய நாவற்குழியை சேர்ந்த குற்றவாளிக்கு மரண தண்டணை!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஹெரோயின் கடத்திய நாவற்குழியை சேர்ந்த குற்றவாளிக்கு மரண தண்டணை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1 கிலோ 135 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற நாவற்குழியை குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

கடந்த  2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர்  ராஜபக்ஷ தலைமையில் பொலிஸார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்களை சோதனையிட்டனர்.

இதன்போது பஸ் ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.

ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா  அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி  இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு