பாடசாலைக்கு செல்லும் மகளை பேருந்தில் ஏற்றிவிட காத்திருந்த தாயும், மகளும் ஹன்டர் வாகனம் மோதி பலி!

ஆசிரியர் - Editor I
பாடசாலைக்கு செல்லும் மகளை பேருந்தில் ஏற்றிவிட காத்திருந்த தாயும், மகளும் ஹன்டர் வாகனம் மோதி பலி!

வவுனியா - கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை கூட்டிச் சென்ற தாயும் அவரது 6 வயதான மகளும் ஹன்டர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

இன்று (16) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக  குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த ஹண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற தாய், மகள் மீது மோதியது.

விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மற்றொரு சிறுவன் ஹண்டர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே சாவடைந்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்றபோது ஹண்டர் வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர்.விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள்  துரத்திப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் ஹன்டர் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர். 

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. 

சம்பவஇடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு