தாயாரின் கடைக்கு வந்த சமையல் எரிவாயு விநியோக வாகனத்தை கடத்திய மகன் கைது!

ஆசிரியர் - Editor I
தாயாரின் கடைக்கு வந்த சமையல் எரிவாயு விநியோக வாகனத்தை கடத்திய மகன் கைது!

தாயாருடைய கடைக்கு விநியோகிக்க வந்த சமையல் எரிவாயு விநியோக வாகனத்தை கடத்திய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் வவுனியா - நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கடத்தப்பட்ட வாகனம்  648 வெற்று காஸ் சிலிண்டர்களுடன் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் காஸ் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் வர்த்தக நிலையப்பகுதிக்கு வந்த காஸ் விநியோக வாகனம் 648 வெற்றுக் காஸ் சிலிண்டர்களுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, அங்கு வந்த குறித்த பெண்ணின் மூத்த மகன் வெற்றுக் காஸ் சிலிண்டருடன் அங்கு நின்ற வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தனது மகனுக்கு எதிராக நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் குறித்த வாகனத்தை வெற்று சிலிண்டர்களுடன் மீட்டுள்ளதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும் வாகனத்தையும் நீதிமன்றில் முற்படுத்த நெளுக்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு