எனக்கும் இரா.சம்மந்தனுக்கும் ஒரு நீண்டகால கனவு உண்டு...! அந்த கனவை இம்முறை நிச்சயம் நிறைவேற்றுவோம்... அக்கிராசன உரையில் ஜனாதிபதி...

ஆசிரியர் - Editor I
எனக்கும் இரா.சம்மந்தனுக்கும் ஒரு நீண்டகால கனவு உண்டு...! அந்த கனவை இம்முறை நிச்சயம் நிறைவேற்றுவோம்... அக்கிராசன உரையில் ஜனாதிபதி...

எனக்கும் இரா.சம்மந்தனுக்கும் ஒரு பொதுவான கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கும்போதே இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். என்பதே அந்த கனவாகும். 

அந்த கனவு பற்றி அன்றுதொட்டு பேசுகிறோம், முயற்சி எடுக்கிறோம் ஆனால் அது வெற்றியளிக்கவே இல்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

மேற்கண்டவாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையின்போது குறிப்பிட்டுள்ளார். இதன்போது வடகிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 

நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும். வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. 

ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். 

அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது. நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம். ஆகவே நாம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் 

துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றி பெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் ஆகும்.

பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக.. 

ஆர் சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. 

நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்றபோதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். 

முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். 

அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. 

முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தது. 

இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

காணி விடுவிப்பு, வனவள திணைக்கள ஆக்கிரமிப்பு தொடர்பாக.. 

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பலாலி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. 

மேலும் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. 

ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. 

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. 

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. 

மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள். 

1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

காணாமல்போனோர், அரசியல் கைதிகள் விவகாரம்.. 

காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம். 

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். 

எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

அதிகார பகிர்வு தொடர்பாக.. 

மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

இதன் காரணமாக மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.சுகாதார துறை தொடர்பாகவும் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். 

1992 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண பைகள் (இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் )

மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டம்மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். 

இவ் அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும். 

 பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. 

ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் திரு ஏ எச் எம் டீ நவாஸ் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. 

அதன் பரிந்துரைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம். 

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக... 

யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். 

மல்வத்து ஓயா அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண நதிகள் மற்றும் நீரை முகாமை செய்தல், வடமாரச்சி குளம் மற்றும் களப்பு புனரமைப்பு, குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக அதன் மூலம் நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மூலம் இப் பிரதேசங்களின் மின்சாரத் தேவைப்பாட்டை நிறைவு செய்வதற்காக பயன்படுத்தப்படும். சூரியசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் சக்தி இதற்காக பயன்படுத்தப்படும்.

சுற்றுலாக் கைத்தொழிலுக்காக கூடுதல் வய்ப்பு வழங்கப்படும். முலீட்டு வலயங்கள் அமைக்கப்படும். விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் வழங்கப்படும். 

காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார 

மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு