மீற்றர் வட்டி மாபியாக்கள் மீது எடுக்கப்பட்டதைபோல் வன்முறை கும்பல்கள் மீது உடன் நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
மீற்றர் வட்டி மாபியாக்கள் மீது எடுக்கப்பட்டதைபோல் வன்முறை கும்பல்கள் மீது உடன் நடவடிக்கை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்...

யாழ்.மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படும் வன்முறை கும்பல்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். என வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரட்ண கூறியுள்ளார். 

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண மேலும் தெரிவித்ததாவது; மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அவர்களை அழைத்து வந்து மருதனார்மடம் தோட்டக் காணிக்குள் வைத்து அடத்துத் துன்புறுத்தும் கும்பல் தொடர்பில் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகின.

அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பொதுமக்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக அடித்து துன்புறுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் பிரிவுகளுக்கு உத்தரவிட்டேன்.

அதனடிப்படையில் முதன்மை சந்தேக நபர் உள்பட ஐந்து பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோது எதாவது ஒரு வகையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

முறைப்பாடு வழங்குவதில் சிக்கல் இருந்தால் நேரடியாக வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு தகவல்களை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு