உள்ளூராட்சி தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்துவதற்கு தேவையான அழுத்தத்தை பிரயோகிப்போம்! எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்துவதற்கு தேவையான அழுத்தத்தை பிரயோகிப்போம்! எம்.ஏ.சுமந்திரன்..

உள்ளூராட்சி தேர்தல் நடக்காமல்போகுமானால் நீதிமன்றத்தை நாடி சட்டத்திப் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிப்போம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்றையதினம் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது, அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். 

எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது.இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படலாம். 

அவ்வாறு நடந்தால் உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாணசபை தேர்தலும் உடனடியாக நடத்தப்படவேண்டும். 

மாகாணசபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. தமிழ்தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன் வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு