இறந்ததாக கருதி தந்தைக்கு பால் ஊற்றிய மகன்!! -திடீரென எழுந்ததால் அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
இறந்ததாக கருதி தந்தைக்கு பால் ஊற்றிய மகன்!! -திடீரென எழுந்ததால் அதிர்ச்சி-

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60) என்பவர் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 19 நாட்களாக பொன்னமரவாதியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். 

இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர். ஊரை நெருங்கிய போது மயங்கிய நிலையில் இருந்த சண்முகம் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடினர். 

மேலும் அவர்கள் ஆலம்பட்டி விலக்கு மற்றும் முரண்டாம்பட்டி விலக்கு உள்ளிட்ட மூன்று இடங்களில் வைத்தியசாலையில் இறந்து கொண்டு வந்ததால் சாலையின் குறுக்கே வைக்கோல் மற்றும் பல்வேறு பொருட்கள் போட்டு எரித்து சடங்குகள் செய்து பின் முரண்டாம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர். 

இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றினார். அப்போது திடீரென்று அருள் வந்த நிலையில், என் தந்தை சாகவில்லை, அவர் பிழைத்து விடுவார் என்று கூறியுள்ளார். 

இதைக்கேட்ட அவரது உறவினர்கள் சுப்பிரமணியனை தேற்றினர். தந்தை இறந்த வேதனையிலும், அவர் மீதுள்ள பாசத்திலும் அவ்வாறு கூறியதாக நினைத்தனர். சிறிது நேரத்தில் சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டன. 

இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும், பதட்டத்துடனும் அவரை பார்த்தனர். சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத்தொடங்கினார். 

உடல் நலமும் சீராகி இருந்தது. இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு