வீழ்ந்தது பாகிஸ்தான்!! -2 ஆவது முறையாக ரி-20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து-

ஆசிரியர் - Editor II
வீழ்ந்தது பாகிஸ்தான்!! -2 ஆவது முறையாக ரி-20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து-

8 ஆவது ரி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடை பெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சூழல்ச்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 29 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ஓட்டங்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்நது களமிறங்கிய முகமது ஹாரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார்.மறுபுறம் நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்த பாபர் அசாம் 32 ஓட்டங்களில் வெளியேறினார். 

அடுத்து அந்த இப்திகார் அகமது ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 121 இருந்த போது சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ஓடங்களில் ஆட்டமிழந்தார். 

அதிரடியாக விளையாடி வந்த ஷதாப் கான் ஓட்டங்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 20 ஓடங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 138ரன்கள் எடுத்தால் ரி-20 உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர்.

ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் ஒரு ஓட்டத்துடன் அலெக்ஸ் ஹாலெஸ் வெளியேறினார், மறுபுறம் பட்லர் அதிரடியாக விளையாடினார். பின்னர் பில் சால்ட் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார், தொடர்ந்து பட்லர் 32 ஓட்டத்துடன் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் , ஹார்ரி புரூக் இருவரும் நிலைத்து ஆடி ஓட்டங்களை சேர்த்த்னர்.

புரூக் 20 ஓட்டத்துடன் ஷதாப் கான் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து ஸ்டோக்ஸ் ,மொயீன் அலி இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். 

இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 ரி-20 உலக கோப்பையை வென்றது. இது அந்த அணி வெல்லும் 2வது ரி-20 உலகக்கோப்பை ஆகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு