உரிய அனுமதிப் பத்திரமின்றி 1176 லீற்றர் எரிபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான நபர் விடுதலை!யாழ்.மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
உரிய அனுமதிப் பத்திரமின்றி 1176 லீற்றர் எரிபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான நபர் விடுதலை!யாழ்.மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பு..

எரிபொருளை வைத்திருப்பதற்கான உரிய அனுமதி பத்திரம் இன்றி பெருமளவு எரிபொருளை வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட யாழ்.ஏழாலை பகுதியை சேர்ந்த நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுபதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரத்து 660 லீற்றர் மண்ணெண்ணை, 306 லீற்றர் பெற்றோல், 210 லீற்றர் டீசல் ஆகியன சான்றுப் பொருட்களாக வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் ரூபாய்  500 ரூபாய்க்கு 750 மில்லி லீற்றர் பெற்றோலை  பொலிஸாருக்கு விற்பனை செய்ததாகத் தெரிவித்து 500 ரூபாய் தாள் ஒன்றும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் அவருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் கொன்ரபில் ஒருவரும்  விசாரணையின் போது சாட்சியமளித்தனர்

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பெற்றோல் விற்பனை எதனையும் தான் மேற்கொள்ளவில்லை என்று தனது சாட்சியத்தில் தெரிவித்ததோடு விவசாய நடவடிக்கைகளுக்காக குறித்த எரிபொருள்களை தான் சேகரித்து வைத்திருந்தாக  மன்றுரைத்தார்.

அத்துடன், விவசாயத்திணைக்களத்தினால் தனக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் தனது இரண்டு மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டி, லான்ட்மாஸ்டர் என்பவற்றின் பதிவுச் சான்றிதழ்களையும் மன்றில் சமர்பித்தார்.

குறித்த நபர் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படவேண்டிய பாவனையாளராகக் கருதப்பட வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் எரிபொருட்களை அவர் தன்வசம் வைத்திருப்பது குற்றமாகாது என்றும் அவரின் சார்பில் சட்டத்தரணி திருமதி ஏ.கீர்த்தனாவின் அனுசரணையுடன்  முன்னிலையான மூத்த சட்டத்தரணி என் ஸ்ரீகாந்தா வாதாடினார்.

மேலும் குற்றச்சாட்டுகளில் உரிய சட்டப்பிரிவுகள் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் மூத்த சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றின் முன்னால் உள்ள சகல விடயங்களையும் பரிசீலித்துப்பார்க்கையில்  இரண்டு குற்றச்சாட்டுக்களிளிருந்தும் குறித்த நபரை விடுதலை செய்து மல்லாகம் நீதிவான் திருமதி காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கைப்பற்றப்பட்ட எரிபொருட்களை அவரிடமே மீளக் கையளிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு