ஒரு லீற்றர் பெற்றோல் 500 ரூபாய்..! யாழ்.மயிலங்காட்டில் 2200 லீற்றர் எரிபொருட்களுடன் பதுக்கல் வியாபாரி சிக்கியது எப்படி?
யாழ்.சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில் 11 பரல்களில் எரிபொருட்களை பதுக்கிவைத்து கள்ள சந்தையில் வியாபாரம் செய்துவந்த நபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், எரிபொருள் பரல்களையும் மீட்டிருக்கின்றனர்.
8 பரல்களில் மண்ணெண்ணெய், 2 பரல்களில் பெற்றோல் மற்றும் ஒரு பரல் டீசல் என்பனவே கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றோடு இணைந்த கடை ஒன்றிலிருந்து நேற்று மாலை எரிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெற்றோல் ஒரு லீற்றர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மண்ணெண்ணெய் சுமார் ஆயிரத்து 600 லீற்றர், பெற்றோல் சுமார் 400 லீற்றர் டீசல் சுமார் 200 லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளன.