சமையல் எரிவாயு வழங்ககோரி A-9 வீதியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
சமையல் எரிவாயு வழங்ககோரி A-9 வீதியை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்..!

சமையல் எரிவாயு கோரி A-9 வீதியை வழிமறித்து பொதுமக்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியதால் A-9 வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக எரிவாயு இல்லாமையினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று (20.05) காலை தொடக்கம் மாவட்டத்தில் இரு இடங்களில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், 

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்திலும் அதிகாலை தொடக்கம் எரிவாயுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள குறித்த எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்தில் எரிவாயு வழங்கப்படமாட்டது என தெரிவித்த நிலையில், கோபமுற்ற மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், பொலிசார் வீதியிலிருந்த எரிவாயு சிலிண்டர்களை அகற்றியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அகற்றினர். 

இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கிடையே கடும் தர்க்க நிலையும் ஏற்பட்டிருந்தது. 

குறித்த போராட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்து அரை மணித்தியாலயம் வரை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் குறித்த நிலையத்தில் எரிவாயு வழங்கப்படமாட்டது எனவும், 

மக்களை அங்கிருந்து செல்லுமாறு பொலிஸார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் வெளியேறிச் சென்றிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு