யாழ்.மாவட்டத்தில் இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பு..!

யாழ்.மாவட்டத்தில் இயற்கை விவசாயத்திற்கு இராணுவம் தங்களால் முடிந்த சகல உதவிகளையும் வழங்கி துணையாக இருக்கும். என யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபத ஜெனரல் டி.ஜி.எஸ்.செனரத் யாப்பா கூறியுள்ளார். 

திருநெல்வேலி விவசாய பண்ணையில் இன்று காலை இடம்பெற்ற பசுமை விவசாயத்தை ஊக்குவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் வழிநடத்தலில் கீழ் பசுமை விவசாய திட்டம் நாடு பூரா செயல்படுத்தப்படுகிறது. 

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் எனது தலைமையில் குறித்த செயற்திட்டம் மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டமானது இரசாயனப் பசளைகளில் இருந்து விடுபட்டு இயற்கை பசளையை ஊக்குவித்து அதன்மூலம் பெறப்படுகின்ற ஆரோக்கியமான  உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு வழங்குவது ஒன்றேயாகும்.

அண்மையில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் பசுமை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்தோம். திட்டம் தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தி அவர்களை அந்த துறையில் வளர்த்து,

விடுவது எமது நோக்கம். பசுமை விவசாய திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக மாவட்ட விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைத் திணைக்களங்கள் பயிற்சிகள் வழங்குகின்றன.

ஆகவே பசுமை விவசாயத்தை ஊக்குவித்து நஞ்சற்ற உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட கமநல ஆணையாளர் நிஷாந்தன் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் வடமாகாண விவசாய உதவி பணிப்பாளர் திருமதி அஞ்சனா ஸ்ரீரங்கன் 

மற்றும் கமநல உத்தியோகத்தர்கள் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு