பற்றாக்குறைக்கு மத்தியிலும் யாழ்.மாவட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடக்கிறது..!

ஆசிரியர் - Editor I
பற்றாக்குறைக்கு மத்தியிலும் யாழ்.மாவட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடக்கிறது..!

யாழ்.குடாநாட்டில் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை காணப்படியும் மக்களுக்கு தேவையானவற்றை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். என யாழ்.வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் கூறியுள்ளார். 

இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் நாட்டில் படிப்படியாக சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக அந்தந்த நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியதன் காரணமாகபால் மா, எரிவாயு சிலிண்டர்,கோதுமை மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புகள் காரணமாக மீளப்பெறப்பட்டு அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

60 – 70 வீதமான கோதுமை மா விநியோகம் தற்போது சீராகிவருகிறது. பாண் மற்றும் பணிசுக்கு மாத்திரம் போதுமான அளவிற்கு கோதுமை மா வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

பால்மா விநியோகமும் இந்த மாத இறுதியில் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நெல்லின் விலை அதிகரித்ததால் உள்ளூர் நாட்டரிசி 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

இறக்குமதி செய்யப்படும் அரிசி 130 – 140 ரூபாய் வரையும் கீரிசம்பா 190 – 200 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.

உள்ளூர் அரிசிகளின் விலை தைப்பூசத்திற்கு பின்னர் சற்று குறைவடையும் சாத்தியக்கூறுகள் உள்ளது. 

15 – 20 ரூபாய் வரை இந்த விலை இறக்கம் ஏற்படலாம். ஆனால் நெல் உற்பத்தியில் உரத் தட்டுப்பாடு மழையின்மை போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது.

நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்ற நேரத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

உளுந்து, பயறு,எள்ளு மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்ச்செய்கைகளில் விவசாயிகள் ஈடுபடவேண்டும். 

அரசாங்கம் உழுந்தை தடை செய்துள்ள நிலையில் எல்லோரும் உழுந்தை அதிகளவில் உற்பத்தி செய்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது. 

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு