நல்லூர் மாப்பாண முதலியார் மிகச்சிறந்த பண்பாளர்!

ஆசிரியர் - Admin
நல்லூர் மாப்பாண முதலியார் மிகச்சிறந்த பண்பாளர்!

நல்லூர் மாப்பாண முதலியார்மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி என நல்லூர் மாப்பாண முதலியார் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் யாழ்மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.

1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அவரது இறுதி காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் அவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது.
மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி அவர்.

அவர் எம்மை விட்டு பிரிந்த போதும் அவருக்கு நிகரான அல்லது ஒருபடி மேலான தனது புதல்வனை எமக்கு தந்திருக்கின்றார்.

இன்று யாழ் மாநகர சபை தற்காலிகமாக இயங்குகின்ற இடம் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு உரித்தான இடம். யுத்தத்தினாலே நகரில் இருந்த மாநகர சபை கட்டடம் இடிந்து அழிந்த போது அதனை தற்காலிகமாக இயக்க ஓர் இடம் தேவைப்பட்டது. அவ் இடத்தினை இலவசமாக மாநகர சபைக்கு தந்துதவியவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரே ஆவார்.

யாழ் நகரில் தற்போது மிகக் கம்பீரமாக கட்டி எழுப்பப்பட்டுவரும் மாநகர சபைக்கான நகர மண்டப கட்டட தொகுதி இலங்கையின் மிகச்சிறந்த கட்டட கலை வல்லுனர்களில் ஒருவரான இவரது புதல்வனின் வடிவமைப்பிலேயே அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசினால் கட்டி முடிக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தின் வடிவம் தொடர்பில் கட்டட கலை நிபுணர்களிடையே ஓர் போட்டி நடாத்தப்பட்டது. அப்போட்டியாளர்களுக்கு மத்தியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் நடுவர்களுள் ஒருவராகவும் இவரது புதல்வன் செயற்பட்டார்.

மாநகர சபைக்கும் நல்லூர் உற்சவ காலத்திற்குமான தொடர்பு விபரிக்க வேண்டிய ஒன்றல்ல.

அந்த வகையில் மாநகர சபைக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்குமான பந்தம் நீண்டது ஆழமானது.

அந்த வகையில் அவரது இழப்பு எமக்கு பாரிய இழப்பு. அவரது பிரிவால் துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் எனதும் மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நல்லூர் கந்தனை வேண்டுகின்றேன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு