யாழ்.மாவட்ட மக்களுக்கு 29ம் திகதி தொடக்கம் தடுப்பூசி! கர்ப்பவதிகளுக்கும் தடுப்பூசி, சுகாதார அமைச்சின் பூரண விளக்கம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு 29ம் திகதி தொடக்கம் தடுப்பூசி! கர்ப்பவதிகளுக்கும் தடுப்பூசி, சுகாதார அமைச்சின் பூரண விளக்கம்...

யாழ்.மாவட்டத்திற்கு சுமார் 3 லட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 29ம் திகதி மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அது குறித்த விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 3 ஆம் கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு இரண்டு இலட்சம் கிடைக்கின்றன. 

இதன் மூலம் முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. யாழ் மாவட்டத்தில் நாளைமறுதினம் ஜூலை 29 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படும். 

முதல் நாள் ஜூலை 29 ஆம் திகதி வியாழக்கிழமை 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும், ஏனைய மாகாணங்களிலும் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு 

அவர்களது வதிவிடம் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தடுப்பூசிகள் வழங்கப்படும்.இவர்கள் தமது ஆசிரிய பணியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

முன்கள பணியாளர்கள்..

முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசியானது ஜூலை 30ஆம் திகதி இரண்டாம் நாள் முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள் தமது பிரிவிற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு 

தமக்கான தடுப்பூசி வழங்கும் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள்..

18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தினத்தில் தடுப்பூசி வழங்கப்படும். இத் தடுப்பூசி ஏற்றப்படும் தினம் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறியத்தரப்படும்.

தடுப்பூசி அல்லது மருந்துகளால் ஒவ்வாமை உடையவர்கள்..

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி 

மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு 

மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

தடுப்பூசி பெற வரமுடியாதவர்களுக்கு..

தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அழைத்து வர முடியாத நிலையில் படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நோயளர்களின் விபரங்களை அவர்களை பராமரிப்பவர்கள் அப்பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இவர்களுக்கான தடுப்பூசியானது தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் இறுதி நாட்களில் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு