ஆசிரியர் சங்க உறுப்பினர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை செய்! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
ஆசிரியர் சங்க உறுப்பினர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுதலை செய்! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கை..

கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் விடயம் தொடர்பில் சிறீலங்கா அரசிடம் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கைகளை முன் வைப்பதாக அதன் பொதுச் செயலாளர் சி.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (14) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவதுகைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 

ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு மாற்று உடைகள் எடுப்பதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. படுக்கை விரிப்புகளையே மாற்றுடைகளாக அணிய வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. 

இதனால் பெண் ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியமைக்காக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசேப் ஸ்ராலின் உட்பட 19 ஆசிரியர்கள் 

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி நிகழ்வுகளில் சுகாதார விதிமுறைகளை மீறி பலர் கலந்து கொள்கின்றனர் அவர்களில் எவரும் 

தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை, சுகாதார விதிமுறைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக விவகாரம் இலங்கை தீவில் வாழும் அனைத்து மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விவகாரமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை நான்கு காரணங்களுக்காக இதில் அக்கறைப்பட வேண்டியுள்ளது.

இதில் முதலாவது கொத்தலாவை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் ஏனைய பல்கலைக்கழக ஒழுங்கிலிருந்து விலகி தனியான பல்கலைக்கழகமாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்க இருக்கின்றது. 

பாதுகாப்பு கற்கை நெறியைத் தவிர சமூக விஞ்ஞானம் பொறியியல் கற்கைத்துறைகளும் அங்கு இடம்பெறவுள்ளன. இவ்வாறு தனியாகச் செயற்படுவது பொதுக்கல்வியைப் பாதிக்கும். இன்று அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழேயே இயங்குகின்றன. 

எனவே இச்சட்ட மூலத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது.இரண்டாவது சுகாதார விதிமுறைகளுடன் ஆர்ப்பாட்டத்தை நடாத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமை ஒரு அடிப்படை உரிமை மீறலாகும். 

அடிப்படை உரிமை மீறல் எங்கு இடம்பெற்றாலும் அதற்கு எதிராகப் போராடுவதும், போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவு வழங்குவதும் தமிழ் மக்களது கடமையாகும்.மூன்றாவது இலங்கை ஆசியர் சங்கம் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுள்ளது. 

அதன் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றது. இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசேப் ஸ்டாலின் தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளுக்காக தென்னிலங்கையில் குரல் கொடுத்து வருகிறார். 

போராட்டங்களை நடாத்துகின்றார். எனவே தமிழ் மக்களின் நட்புச்சக்திகளாகிய இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.நான்காவது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் சிங்கள மக்களில் ஒரு பகுதியினரது ஆதரவையாவது வென்றெடுப்பது அவசியமாகும். 

இப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதன் மூலமும், போராட்டத்தில் பங்கு பெறுவதன் மூலமும் சிங்கள மக்களோடு நாமும் நிற்கின்றோம். என்ற செய்தியை வழங்குகின்றோம். இது எதிர் காலத்தில் சிங்கள மக்களில் ஒரு பகுதியினரையாவது எமது போராட்டத்திற்கு சார்பாக வென்றெடுப்பதற்கு உதவிக்கரமாக அமையும்.

எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் சார்பாக பின்வரும் கோரிக்கைகளை சிறீலங்கா அரசிடம் முன்வைக்கின்றோம்.

1) ஜோசேப் ஸ்ராலின் உட்பட இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களை தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக விடுதலை செய்.

2) பொதுக் கல்வியை சீரழிக்கும் கொத்தலாவை பல்கலைக்கழக சட்ட மூலத்தை உடனடியாக வாபஸ் பெறு.

3) ஆசிரிய சமூகத்தின் அனைத்து உரிமைகளையும் அங்கீகரி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு