எத்தடை வரினும் அரசுக்கு எதிராக யாழில் நாளை போராட்டம்!! -சூழுரைக்கும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி-

யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை இடம்பெற உள்ளதாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
எந்த தடை வந்தாலும் நாளை யாழ்ப்பாணத்தில் அரசுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தற்போது அரசியல் நிலைமை மக்களுக்கு விரோதமான செயற்பாடாக காணப்படுகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராக ஜனாதிபதியாக அமைச்சர்களாக காணப்படுகின்றார்கள்.
தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருள் பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு விலை ஏற்றம் காணப்படுகின்றது.
தற்போது கொரோனா என்ற திரை மறைவில் நமது நாடு விற்கப்படுகின்றது அதாவது அந்நிய நாட்டுக்கு விற்கப்படுகிறது. அதாவது கடல், தரை என்பன மறைமுகமாக இந்த அரசாங்கத்தினால் அந்நிய நாடுகளுக்கு விற்கப்படுகின்றது.
இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது புதிய ஜனநாயக மாக்சிச கட்சி என்பது பொதுமக்களின் நலன் சார்ந்த செயற்படுகின்ற கட்சியாககாணப்படுகிறது.
எனவே மக்களினுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் குரல் கொடுப்பதற்கு தயாராகி வருகின்றோம்.
இதன்படி நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான குரலை கொடுக்க உள்ளோம் என்றார்.