யாழ்.அச்செழு பாடசாலை விவகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு..! கல்வி அதிகாரிகள் மீதும் ஆசிரியர்கள் விசனம்..
யாழ்.அச்செழு சைப்பிரகாச வித்தியாலயத்தில் உப அதிபருக்கும் ஆசிரியர்களுக்குமிடையில் நடந்துவரும் பிணக்குகளை கல்வி அதிகாரிகள் தீர்க்க தவறியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசிரியர்கள் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
குறித்த பாடசாலையில் இடம் பெற்று வரும் பிரதி அதிபஇருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான பிணக்கு காரணமாக பாதிக்கப்பட்ட அநேகமான ஆசிரியர்கள் 27/11/2019 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் யாழ்.வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு
தெரியப்படுத்தி இருந்தனர். அக் கடிதத்தில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களின் செயற்பாட்டினால் தமது சுய கௌரவம் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு குறித்த பாடசாலையின் பிரதி அதிபரே காரணமாக உள்ளார் எனவும் ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மீண்டும் 13/12/ 2019 திகதி இடப்பட்டு வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு ஆசிரியர்களினால் தெளிவான அறிக்கை கொடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இக் கடிதத்தில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் தனித்தனியான நிர்வாகமாக செயற்படுவதாகவும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்களை பிளவு படுத்துவதற்கு தமது அதிகாரங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பாடசாலை மாணவர்கள் சிரமதானங்களில் ஈடுபடும் போது வீடியோ எடுத்து ஆசிரியர்களை மிரட்டுவதும் சுகவீனம் காரணமாக உறங்கிய ஆசிரியரை வீடியோ எடுப்பதும் அதனை வெளியாட்களுக்கு வழங்கி பிரதி அதிபர் தனக்கு இசைவாக நடந்து கொள்ளாத ஆசிரியர்களை பழிவாங்குவது தொடர்பிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியராகிய தாங்கள் தமது சுய கௌரவத்தை தொலைத்து விட்டே குறித்த பாடசாலையில் சேவையாற்றும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக மேலதிகாரிகளுக்கு பல தடவைகள் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் பின்புலத்தில் இயங்குவதாக ஆசிரியர்களால் குற்றஞ்சாட்டப்படும் பிரதி அதிபர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது காலம் தாழ்த்துவது ஆசிரியர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தமது மன ஆதங்கங்களையும் உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றியும் அமைச்சரின் கவனத்திற்கு குறித்த பாடசாலை ஆசிரியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.