SuperTopAds

ஏமாற்றத்துடன் வாழும் இரணைதீவு மக்கள்!

ஆசிரியர் - Admin
ஏமாற்றத்துடன் வாழும் இரணைதீவு மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச இரணைத்தீவு மக்களின் சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் இன்று (24) முன்னூறாவது நாளை எட்டியுள்ளது.

தங்களது பூர்வீக இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா், அதிகாரிகள் என அனைவரினதும் வாக்குறுதிகள், காலக்கெடுக்கள் கடற்காற்றோடு பறந்துவிட இரணைத்தீவு மக்களின் போராட்டம் இன்று முன்னூறாவது நாளாக தொடா்கின்றது.

இது தொடா்பாக போராடத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கருத்து வெளியிடுகையில்…..

நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று முன்னுறாவது நாள். இந்த நாட்களில் பல அரசியல்வாதிகள் வந்து சென்றுள்ளனர். இதன் போது அவா்கள் அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வந்தாா் இன்னும் இரண்டு வாரங்களில் சொந்த நிலத்திற்குச் செல்லலாம் நல்லாட்சி அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஓருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சி. சிறிதரனும் வந்தாா். கடந்த ஆட்சியையும் அதனோடு சேர்ந்தியங்கியவா்களையும் குற்றம் சுமத்தினாா்.

தான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அழைத்து வந்து தீர்வு தருவதாக உறுதிமொழி அளித்தாா். காலக்கெடுவும் வழங்கினாா்.ஆனால் எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்த்தன வந்தாா். அவரோடு எற்கனவே வந்த எல்லா அரசியல் பிரமுகர்களும் வந்தனா்.

அவா்களும் காலக்கெடு வழங்கினாா். உறுதிமொழி அளித்தாா்கள். ஆனால் அவா்கள் உறுதிமொழிகளும் காலக்கெடுக்களும் இந்த கடற்கரை காற்றோடு சென்றுவிட்டது.

நாங்கள் ஏமாற்றப்பட்ட மக்களாக சொந்த நிலத்திற்கு செல்லும் கனவோடு மூன்னூறு நாட்களாக பேராடி வருகின்றோம்.

எனவே அரசு எங்களின் நிலைமைகளையும், வாழ்வாதாரத்தினையும் கருத்தில் கொண்டு எங்களது சொந்த நிலத்திற்கு செல்லும் அமைதியான போராட்டத்திற்கு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.