முடக்கும் அவசியம் இல்லை- எதிரணி பொய்ப் பிரசாரம் என்கிறார் பிரதமர்!

ஆசிரியர் - Admin
முடக்கும் அவசியம் இல்லை- எதிரணி பொய்ப் பிரசாரம் என்கிறார் பிரதமர்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டை முடக்க வேண்டிய எந்த அவசியமும் இன்றுவரை ஏற்படவில்லை என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சில தீய சக்திகளாலும் எதிரணியினராலும் வேண்டுமென்றே முன்வைக்கப்படும் விஷமப் பிரசாரம் என்றும் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று பிரதான ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடிய போதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

சிலர் நாட்டை முடக்க வேண்டும், முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்பதாக சில ஊடகங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். உண்மையில் அவை எவற்றுக்கும் இப்போது எந்தவிதமான அவசியமுமில்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பலவிதமான பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாக பரப்பப்பட்டு வருகின்றன.ஆனால் அவை எவற்றிலும் உண்மை இல்லை. உண்மையான நிலைமையை சுகாதார பிரிவினரும் அதனுடன் தொடர்புடைய இராணுவத்தினர் மற்றும் போலிஸார் ஆகியோர் மிக உன்னிப்பாகக் அவதானித்து வருகின்றனர்.

ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் அந்தப் பிரதேசத்தை மட்டும் தனிமைப்படுத்தி அங்குள்ளவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. அவ்வாறுதான் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

இது தேர்தல் காலம் என்பதால் வதந்திகள் பலவிதமாக பரப்பப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தையும் நடைபெறவிருக்கும் தேர்தலையும் குழப்புவதற்காக ஒரு சிலர், சில ஊடகங்களைப் பயன்படுத்தி இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

எனவே ஊடகத்துறையில் தொடர்புள்ளவர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடன் நம் நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் தாக்கலுக்குள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டது முதல் அரசாங்கம் அதனை முறியடிக்கும் முயற்சிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதெனவும் பிரதமர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு