விசேட கூட்டத்தில் விசேடமாக ஒன்றும் பேசப்படவில்லையாம்! யாழ். மாவட்ட கட்டளை தளபதி

ஆசிரியர் - Admin
விசேட கூட்டத்தில் விசேடமாக ஒன்றும் பேசப்படவில்லையாம்! யாழ். மாவட்ட கட்டளை தளபதி

தற்போதைய நிலையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி முப்படை உயர் அதிகாரிகள் தலைமையில் பலாலியில் உயர் மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, “இராணுவத்தினராகிய நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம்.

குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம்தொடர்பில் செயற்பட்டு வருகின்றார் . அவர் பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற விசேட கூட்டங்கள் முப்படையினருடன் இடம்பெற்று வருகின்றது. கடந்த டிசெம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் குறித்த கூட்டம் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது.

விசேடமாக ஒன்றும் பேசப்படவில்லை குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை ஏனெனில் நாங்கள் இன்று வரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம்.

எங்களால் விடுவிக்கப்படக் கூடிய அனைத்து இடங்களையும் இன்றுவரை விடுவித்துள்ளோம் எனினும் எதிர்காலத்தில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

எனினும் தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு