இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி: கேள்விக்குறியாகியுள்ள சிறுபோகச் செய்கை

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் தற்போது 16.6 அடியாக இருப்பதனால் சிறுபோகச் செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னைய காலங்களில் இரணைமடுக்குளத்தில் 30 அடிக்கு நீர் சேமிக்கப்படுகின்ற போது பெப்ரவரி, மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும்.
இந்த நிலையில் இக்குளத்தின் கீழ் 8000 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு குளத்தின் நீரின் கொள்ளளவு 36 அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த பருவ மழை போதுமானதாக இல்லாமையால் புனரமைக்கப்பட்ட குளத்தில் நீர் சேமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த நிலை தொடருமானால் இவ்வருடம் சிறுபோக விதைப்பு சாத்தியப்படாது போய்விடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிடுகிறது.