யாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்..!
யாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மிக துரிதகதியில் ஆரம்பிக்கப்படும். என சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் விரைவில் இலங்கை அரசாங்கம் உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளும். ஏற்கனவே இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கு திட்டமிடப்படிருந்த நிலையில்,
கொரோனோ தொற்றினால், தாமதம் ஏற்பட்டுள்ளது.நாடு படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட போது, அதன் அபிவிருத்திக்காக இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்குவதாக இந்தியா உறுதியளித்திருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முனையப் பகுதி, மின்சார வசதி, மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.