இன ஒற்றுமையை விரும்பாதவர்களே விகாரை மீது தாக்குதல்..! மக்கள் குழப்பமடைய வேண்டாம். விகாராதிபதி கருத்து..
யாழ்.மாவட்டத்தில் நாம் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
இந்த இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்
என ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் இன்று காலை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.