சித்தமருத்துவ அலகின் முதலாவது ஆய்வு மாநாடு
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்திய ஆயுர்வேத அமைச்சும் இணைந்து நடத்தும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழில் நடைபெறவுள்ளது.
கைதடியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இக்கண்காட்சியும் மாநாடும், 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிவரை நடைபெறும். இந்தக் கண்காட்சியின் போது, பயிற்சிப் பட்டறைகளும் இடம்பெறவுள்ளன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பாரம்பரிய சித்த மருத்துவமுறைகளும் காட்சிப்படுத்தப்படும்.சித்த மருத்துவத்தினை ஒரு குடையின் கீழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு இக்கண்காட்சி ஒரு களமாக அமையும் என்றார்.
இந்த மாநாட்டின் போது, சித்த மருத்துவ மாணவர்களினால் ஆராய்ச்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட 205 ஆய்வுக் கட்டுரைகளில் 175 ஆய்வுக் கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த 175 கட்டுரைகளையும் அன்றைய நாளில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இக்கண்காட்சி மற்றும் மாநாட்டில் துறைசார் வல்லுநர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதா ரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் பங்குபற்றி பயன் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.