யாழ்.இளவாலையில் சட்டத்தரணி வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் சட்டத்தரணி வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..!

யாழ்.இளவாலை பகுதியில் உள்ள சட்டத்தரணி றோய் டிலக்சன் என்பவருடைய வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். 

நேற்று மாலை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடி கும்பல் அங்கு தாக்குதல் நடாத்தியது. 

இந்த தாக்குதலினால் பாதிப்பில்லாதபோதும், அச்சுறுத்தும் வகையில் இந்த தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தொிவித்திருக்கும் மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், 

சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். எனவும் கேட்டிருக்கின்றது. 

இது குறித்து சங்கத்தின் செயலாளர் கே.சுகாஷ் விடுத்துள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான சட்டத்தரணி றோய் டிலக்சனின் ஆதனத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். 

சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கின்றது. 

தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு மேற்கொண்டு வரும் றோய் டிலக்சனின் ஆதனத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம். 

பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் றோய் டிலக்சனுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு