பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் பாய்ந்த போதை மருந்து வியாபாரியான சிறுவன் கைது..! யாழ்.மண்டைதீவில் பரபரப்பு..
யாழ்.தீவக பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்துவந்த போதைப் பொருள் விற்பனையாளனான சிறுவன் கடலில் பாய்ந்து பொலிஸரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டுள்ளான்.
இந்தச் சம்பவம் யாழ்.மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்றது. வேலணை சாட்டி கடற்கரை பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதுச் சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சிறுவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
அவனைக் கைது செய்ய முயற்சித்துள்ளார். இதன்போது பொலிஸ் அலுவலகரிடமிருந்து தப்பித்த சிறுவன், பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து நீந்திச் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அதனையடுத்து மண்டைதீவு கடற்படை காவலரணைச் சேர்ந்த கடற்படையினர் நீந்திச் சென்று சிறுவனை கரைக்குக் கொண்டு வந்தனர்.சிறுவனை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தனக்கு போதை மாத்திரைகளை வழங்குபவரை அடையாளம் காட்டுவதாக சிறுவன் தெரிவித்ததை அடுத்து சாட்டி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.