யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் இளைஞனை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் கோரிக்கை நிராகரிப்பு..!
படையினரால் தேடப்பட்டுவந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸில் சரணடைந்த இளைஞனை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவேண்டும். என பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் கடந்த தைபொங்கல் தினத்தில் படையினருடன் இடம்பெற்ற முறுகல் நிலையினை தொடர்ந்து இளைஞன் ஒருவனை படையினர் தொடர்ச்சியாக தேடிவந்ததுடன்,
குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்று அச்சுறுத்தலும் விடுத்துவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்திய நிலையில் இளைஞனின் பாதுகாப்பு கருதி பருத்தித்துறை பொலிஸில் இளைஞன் சரணடைந்தான்.
இதனையடுத்த இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் மன்றில் பி அறிக்கையை சமர்பித்திருந்தனர். அதில் குறித்த இளைஞனை அடையாள அணிவகுப்புக்குட்படுத்தவேண்டும் என கேட்டிருந்தனர்.
எனினும் இளைஞன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரி.சந்திரசேகரன் அதனை மறுத்து வாதிட்டதுடன், ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், சம்பவம் நடந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில்
அடையாள அணிவகுப்புக்குட்படுத்த முடியாது. என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் 19ம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார். மேலும் இளைஞனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரி.சந்திரசேகரன்
இளைஞனை இராணுவம் தேடிவருவதால் அவருடைய பாதுகாப்பு கருதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்குமாறு கேட்டதற்கிணங்க விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.