பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த திருடனை விடுதலை செய்த பொலிஸார், பிடித்துக் கொடுத்தவர்களை அச்சுறுத்தும் திருடன்..! விசாரணைக்கு உயர்மட்ட உத்தரவு..
யாழ்.உடுவில் பகுதியில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கொள்ளையிடப்பட்ட வீட்டவர்களால் அடையாளம் காட்டப்பட்டு பிடிக்கப்பட் கொள்ளை சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசாரணை நடாத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
கடந்த 5ம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையடித்ததுடன், வயோதிபர் மீது தாக்குதல் நடாத்தி காயப்படுத்தியிருந்தது.
சம்பவம் நடைபெற்று மறுநாள் இரவு 11 மணியளவில் அதே பகுதியில் இருவர் சந்தேகத்திற்கிடமானமுறையில் நடமாடியிருக்கின்றனர். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த நபர்களை மடக்கி பிடித்து விசாரித்ததுடன்,
கொள்ளை இடம்பெற்ற வீட்டிலிருந்த வயோதிபரை அழைத்துவந்து அடையாளப்படுத்துமாறு கேட்ட நிலையில் பிடிக்கப்பட்ட இருவரில் ஒருவரை குறித்த வயோதிபர் அடையாளம் காட்டியிருக்கின்றார்.
இதனையடுத்து குறித்த நபர்களை இளைஞர்கள் இணைந்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். எனினும் மறுநாளே அந்த நபரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறிதளவு கஞ்சா வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி
பிணையில் விடுதலை செய்துள்ளனர். பிணையில் வந்தவர் தன்னை மடக்கி பிடித்த ஊர் இளைஞர்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார். குறித்த விடயம் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் ஊடாக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்துவதாகவும், விசேட பொலிஸ் குழு அமைப்பதாகவும் உத்தரவாதம் வழங்கியுள்ளதுடன், அச்சுறுத்தலுக்குள்ளான இளைஞர்களுக்கு பாதுகாப்பளிப்பதாகவும் கூறியுள்ளார்.