யாழ்.மாவட்டம் பேராபத்திலிருந்து தப்பியுள்ளது..! மருத்துவர்கள், சுகாதாரதுறையினருக்கு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாராட்டு.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் பேராபத்திலிருந்து தப்பியுள்ளது..! மருத்துவர்கள், சுகாதாரதுறையினருக்கு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாராட்டு.

யாழ்.மாவட்டத்தில் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டவுடன் நோய் காவியை கண்டுபிடித்து நிகழவிருந்த பேரவலத்தை தடுத்த மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட சுகாதாரதுறையினருக்கு இலங்கை மருத்துவர் சங்கம் பாராட்டுக்களை தொிவித்துள்ளது. 

இன்றைய தினம் யாழ்.பலாலியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து இலங்கை மருத்துவர் சங்கத்தின் வடமாகாண கிளை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

மாகாணப் பணிப்பாளர் மதகுருவிற்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதேகணம் தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15க்குட்பட்ட தொற்றாளர்களுடன் கொரொனாவை கட்டுப்படுத்தியுள்ளார். 

இவரது தலைமையில் இன்று உண்மையில் நாம்(சுகாதாரத்துறை) அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமை கொள்ள கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். 

சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து தொடர்புகளை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும் இத்தொடர்புகளை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீட்டியதுமே இதற்கு காரணமாகும். 

யாழ் சமூகம் இன்று பாரிய சேதத்தைத் தடுக்க இவை பங்களித்தன என்றால் மிகையாகாது. ஆயினும் இன்று தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்த வேண்டும்.

அவர்களுக்கும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும் மதகுருவுடன் நெருங்கி பழகிய அனைவருக்கும் மீள பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் கூறியபடி மூன்று தடவைகளாவது செய்ய வேண்டும். 

முதல் தொடர்புடையவர்களை மட்டுமல்ல இரண்டாம், மூன்றாம் தொடர்புடையவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்துவது சம்பந்தமாக மாகாண பணிப்பாளர் தனது ஆளணியினருடன் மீளாய்வு செய்தல் வேண்டும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகம் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.12நாட்களின் பின்னர் இன்று தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்கு காரணம் நாங்கள் அதிகளவிலான பரிசோதனைகளை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதிக்காமையுமே காரணமாகும். 

பலாலியில் இருந்த 14 பேருக்கும் இன்று 12 நாட்களின் பின்னரே இப்பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் வைத்தியசாலைகளில் மீண்டும் அவசியமற்ற சேவைகளை ஆரம்பிக்கும் போது உள்ள ஆபத்துக்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

ஆகையினால் ஒரு நாளைக்கு செய்கின்ற பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு