கொரோனா பாதிப்பு குறித்து யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார அதிகாாிகள் ஆளுக்கொரு கதை கூறுவது ஏன்..? சமூக ஆா்வலா்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
கொரோனா பாதிப்பு குறித்து யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார அதிகாாிகள் ஆளுக்கொரு கதை கூறுவது ஏன்..? சமூக ஆா்வலா்கள் கேள்வி..

கொரோனாவின் வைரஸ் குறித்து உலகளாவிய ரீதியாக அச்சம் ஏற்பட்டுள்ள போதிலும் வடக்கில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அமைதியாக இருக்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதிலும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஊடக சந்திப்பில் வடக்கில் கொரோனா ஆபத்து குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் எனக் கூறியிருக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக மருத்துவத்துறை அதிகாரிகளை இணைத்து பொதுக்கூட்டத்தை கூட்டி முன்னாயத்த நடவடிக்கை குறித்து ஆராய்ந்து மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்ற தன்னார்வ தொண்டர் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,சீனாவில் கொரோனாவின் தாக்கம் பெருமளவில் இருந்தாலும், அது குறித்து சீன அதிகாரிகள் 

குறைந்தளவான தகவல்களையே வெளியிட்டு வருகின்றனர். தமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற அச்சம் காரணமாக அவர்கள் தமது மக்களின் பாதிப்புக்களை மறைத்து வருகின்றனர்.அமெரிக்கா, கனடா, இத்தாலி, தென்கொரியா, ஈரான் 

போன்ற பல அபிவிருத்தி அடைந்த நாடுகளையே கொரோனா அச்சுறுத்தி வருகின்றது. ஆனால். வடக்கில் இந்த வைரஸ் பரவாது, வடக்கிற்கு ஆபத்து இல்லை என்பது போல யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.

சாதாரணமாக மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்பட்டபோதே அவற்றுடன் போட்டியிட்டு, கட்டுப்படுத்த சிக்கித் திணறிய வடக்கு மருத்துவ சமூகம், சர்வதேச உயிர்கொல்லி நோயான கொரோனா குறித்து அச்சமின்றி இருக்கின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றனர். புலம்பெயர் உறவுகளின் வருகையும் தொடர்கின்றது. சீனப் பிரஜைகளுக்கும் தடை இல்லை. பன்னாடுகளில் இருந்தும் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் கடத்தப்படுகின்றது.

நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றது. ஆனால், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை இல்லை. சுற்றுலா கடற்கரைகள் மூடப்படவில்லை, களியாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

எனவே, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடனடியாக மருத்துவத்துறை அதிகாரிகள், மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உள்ளடக்கிய பொதுக்கூட்டத்தை கூட்டி கொரோனா தடுப்பு முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.

வந்தபின் வருந்துவதை விடுத்து, முன்னாயத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். யுத்தத்ததால் இலட்சக்கணக்கில் அழிந்தது போக, எஞ்சி இருக்கும் தமிழர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். என தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு