கேப்பாபுலவு மக்களை கெட்ட வார்த்தையால் திட்டிய பொலிசார்!

கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நில மீட்பு போராட்டம் இன்று(04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று(04) இடம்பெற்ற நிலையில் சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் என தெரிவித்து தமது போராட்ட இடமெங்கும் கறுப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் கேப்பாபுலவு விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள முருகன் ஆலயம் நோக்கி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டவாறு சென்ற வேளை குறித்த இடத்துக்கு வந்த முள்ளியவளை பொலிசார் மக்களை இடையில் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என்று தெரிவித்த நிலையில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த கந்தேவத்த அவர்கள் மக்களை தகாத முறையில் திட்டியதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதேவேளை தாம் ஆலயம் நோக்கி சென்ற உழவு இயந்திரத்தை போராட்டம் செய்த குற்றத்துக்காக பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் கிறிஸ்தவ மதகுரு மற்றும் சிறுவர்கள் பெண்கள் முன்னிலையில் ஒரு உயர்நிலை பொலிஸ் அதிகாரி இவ்வாறு கெட்ட வார்த்தையால் திட்டியதுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.