விக்கியின் கூட்டணியில் இணையத் தயார்! - பெருமாள் பச்சைக்கொடி

ஆசிரியர் - Admin
விக்கியின் கூட்டணியில் இணையத் தயார்! - பெருமாள் பச்சைக்கொடி

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாக வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

' நாடாளுமன்றத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என தற்போது வரை தீர்மானித்துள்ளோம். எனினும் வடக்கு- கிழக்கு சார்பாக புதிய கூட்டணிகள் அமைக்கப்படுவதால் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் நாம் இணைவது சம்பந்தமாக அவர்கள் அழைப்பு விடுத்தால் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

நமக்கும் அவர்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க அனைவரும் ஒற்றுமை பட வேண்டும். அதனை விடுத்து தேர்தல் காலங்களில் இணையும் கூட்டணியாக இருக்க கூடாது. இதுவரை எனக்கு அவர்களிடம் இருந்து அழைப்பு கிடைக்கவில்லை. அழைத்தால் பேச தயாராகவே இருக்கின்றேன்.

மேலும் இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையே பல விரிசல்களை ஜெனிவா ஏற்படுத்தி உள்ளது. நாம் இரண்டாம் தர பிரஜைகள் என்று எண்ணாது அனைவரும் சமமான பிரஜைகள் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். சர்வதேசம் தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்படவில்லை.

மாறாக அவர்கள் தங்களின் வியாபாரத்திற்காக எமது பிரச்சினைகளை கருவியாக பார்க்கின்றார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெனிவா தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தமது இழந்த செல்வாக்கை மீள பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. எனவே அரசாங்கம் அந்த தீர்மானத்தில் இருந்து விலகுவதால் எமக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட போவதில்லை ஆனால் இதனை அரசு விலகுகிறது ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுகிறது பூதாகரமாக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றது. மக்கள் இம்முறையாவது சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு