தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் மைத்திரி!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் மைத்திரி!

19வது திருத்தத்தை அழிக்க மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு தமிழர்கள் பெரும் பங்களிப்பை செய்திருந்தார்கள். அந்தவகையில் சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவக்கூடிய 19வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.

மக்களும் சுமூகமான வாழ்வை குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருந்தார்கள். தற்போது அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்துள்ள ராஜபக்ஷ குடும்பம் 19வது திருத்தத்தினை இல்லாமல் செய்ய முற்படுகின்றது.

அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முண்டு கொடுப்பதாக இருந்தால் மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் வாக்குகளில் வந்து அனுபவித்த விடயங்கள் அனைத்தும் தவறான விடயமாக அமையும். இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் தீர்வு விடயம் மட்டுமல்லாது உரிமை விடயத்திலும் முக்கிய கரிசனை கொள்ளும். எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் அவர்களுடன் சுமூகமாக இணங்கி தமிழர்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம்.

இந்நிலையில் 1948இல் இருந்து எந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கி வரவில்லை. இன்று பேரினவாதம் தலைதூக்கி நிற்கின்றது. முடிவுகளும் இனவாத சிந்தனையில் வந்து கொண்டிருக்கின்றன. எனவே எந்தவொரு அரசாங்கமும் இனவாத சிந்தனையில் இருந்து வெளியில் வந்து ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கான தீர்வை வழங்க முற்படுவார்கள் என நம்ப முடியாதுள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு