தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என்பதற்காக தமிழர்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்! - சம்பந்தன்

ஆசிரியர் - Admin
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என்பதற்காக தமிழர்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்! - சம்பந்தன்

புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'நாங்கள் இன்று கோருவதெல்லாம், நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே தான் கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலை நாங்கள் பகிஸ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள் அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றது. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஸ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக அதிகார பகிர்வு சம்பந்தமாகவும் மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோத்தாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு.

அதிஉச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006 ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினை கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதிஉச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஸ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதனை மக்கள் ஏற்க கூடாது என அவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு