கிளிநொச்சியில் மஞ்சள் விரட்டு!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், இம்முறை கிளிநொச்சி – பெரியபரந்தனில் களைகட்டும் மஞ்சள் விரட்டு விளையாட்டினால், அப்பகுதி மக்கள் பெரும் ஆரவாரத்துடன் காணப்படுகின்றனர்.
ஜல்லிக் கட்டு போன்று மஞ்சள் விரட்டு விளையாட்டானது, பாரம்பாரிய விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன் பல கிராமங்களில் மஞ்சள் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது.
யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற மஞ்சள் விரட்டு விளையாட்டானது, இடம்பெறாது இருந்த நிலையில், இவ்வருடம் மீண்டும் இந்த விளையாட்டு, கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேச இளைஞர்களால் நடத்தப்பட்டுள்ளது.
தாங்கள் வளர்க்கும் மாடுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்றின் கழுத்தில், துணி ஒன்றில் பணம் சுற்றி கட்டிவிடப்படும். பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளரால் தனது மாட்டை பிடித்து கழுத்தில் கட்டப்பட்ட துணியை கழற்றினால், இவ்வளவு தொகை பரிசு என அறிவிக்கப்பட்டு, மாடுகள் வெடிகொளுத்தி விரட்டப்படும்.
விரட்டப்படும் மாடுகளை இளைஞர்கள் மடக்கி பிடிக்க வேண்டும். இதுவே மஞ்சள் விரட்டு விளையாட்டாக இருந்து வருகிறது. இந்த விளையாட்டு, இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.