யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் எல்லை மீறிய பகிடிவதை, பொலிஸார் அசமந்தம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் எல்லை மீறிய பகிடிவதை, பொலிஸார் அசமந்தம்..

இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டு மிகப் பாரதூரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்ற பகிடிவதைச் சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து 

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் உப விடுதிக் காப்பாளர் ஆகியோர் பகிடிவதை தொடர்பாக சிரேஸ்ட மாணவிகளிடம் விசாரனைகளை மேற்கொண்ட போது சிரேஸ்ட மாணவிகள் தொழில்நுட்ப பீட வளாகத்தினுள் குழப்பங்களை ஏற்படுத்தியதை அடுத்து ஏற்பட்ட பதட்ட நிலை காரணமாக துணைவேந்தரின் அறிவித்தலுக்கு அமைய தொழில்நுட்ப பீடம் கல்வி நடவடிக்கைகளுக்காக மறு அறுவித்தல் வரை மூடப்பட்டது.

இதனையடுத்து இன்று வியாளக் கிழமை தொழில்நுட்ப பீடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிசார் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் பாணியில் சம்பவம் தொடர்பில் உப விடுதிக் காப்பாளரை கைது செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர். 

எனினும் கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் அதற்கு அனுமதிக்காததைத் தொடர்ந்து குறித்த ஒரு உப விடுதிக் காப்பாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப் போவதாக மிரட்டியும் சென்றுள்ளனர். அத்துடன் நாளை காலை பெண் உப விடுதிக் காப்பாளர் ஒருவரை ஆயராகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கின்றது.

தண்டனைக்குரிய – சட்டத்திற்கு முரணான வகையில் பகிடிவதையில் ஈடுபட்ட சிரேஸ்ட மாணவர்கள் மீது பல்கலைக் கழகத்தின் ஒழுக்காற்று விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பகிடிவதையில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் காப்பாற்றும் வகையிலும் பகிடிவதையைத் தடுக்கும் நோக்கில் கடமையைச் செய்கின்ற உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் 

வகையிலும் கிளிநொச்சி பொலிசார் நடந்து கொண்டமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாண பல்கலைக் கழக துணைவேந்தர் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை – பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முற்படுகின்ற போது இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் எதிர்காலத்தில் தாங்கள் தங்கள் கடமையைச் செய்வதில் பிரயோசனம் இல்லை என்று பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு