ஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்!
யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி ஊடகவியலாளர் குகராஜ் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கொக்குவில் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை தொலைக்காட்சிச் செய்திக்காக படமெடுத்துக் கொண்டிருந்த போதே குறித்த ஊடகவியலாளரை பொலிஸார் தாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவத்தை படமாக்க வேண்டாம் என பொலிஸார் அச்சுறுத்தியமையும், பின்னர் அவர் மீது தாக்குதல் நடத்தியமையும், ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செயற்பாட்டையும் மீறும் ஒரு செயற்பாடு என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது.
இச்சம்பவத்தை ஒன்றியம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம் எனவும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.