யாழ்.கொக்குவில் வாள்வெட்டு குழு வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீவைத்து கொழுத்தி அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் கருவப்புலம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று , இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன முற்றாக தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் , வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியும் எரிந்துள்ளன.

வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , வீட்டரால் யாழ்.  மாநகர சபை தீயணைக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினரால் வாகனங்களின் தீயினை கட்டுக்குள் கொண்டு வர முடியாத போதிலும், வீட்டின் மீது பரவிய தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது வீட்டார் வீட்டினுள் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீட்டரால் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு