கூட்டமைப்பு ஊடாக அரசியல் முகவரி பெற்றவர்களே கூட்டமைப்பை சிதைக்க முயற்சி! - ஜனநாயக போராளிகள் கட்சி

விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை நோக்கி கூட்டமைப்பை நகர்த்த முயற்சிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வவுனியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எவ்வாறான முரண்பாடுகள் இருக்கின்றதோ, இல்லையோ ஒட்டு மொத்தமாக தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே இதுவரை காலமும் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமது அரசியல் முகவரியை பெற்றுக்கொண்டவர்கள் தாயக பிரதேசத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசியகூட்டமைப்பு தமிழர்களது அரசியல் வடிவமாக பயணிப்பது காலத்தின் கட்டாயமானதாகும். அந்தவகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய வெற்றிக்கு இட்டுச்செல்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவான ஜனநாயக போராளிகள் கட்சியானது தனது முழுமையான ஆதரவை வழங்கியிருக்கிறது.
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாமல் விட்டால் ஏனைய தேசிய கட்சிகள், தமிழ் தேசியத்தினூடாக தமது பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய நிலையேற்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சில விமர்சனங்கள் இருக்கலாம். கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களில் சில விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடு.
அனைத்து போராளிகளும் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் இணைந்தே பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எம்மிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சில நபர்கள்தான் கட்சிகளையும் முரண்பாடான தோற்றப்பாடையும் உருவாக்கி செற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஏனைய போராளிகள் எம்மோடு இணைந்து தமிழ் தேசியத்தை பலப்படுத்துவதற்கான பயணத்தில் கைகோர்த்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அந்த கட்டமைப்பில் இருந்தவர்களை விட விடுதலைப்புலிகளில் மிக திறமையான அரசியலாளர்கள் இருந்தார்கள். ஆனால் காலத்தின்தேவை கருதியே தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைத்து தேசிய தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார். இந்தநிலையில் தமிழர்களிற்கான தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப்பலிகளினால் எட்டப்பட்ட தீர்மானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பை நகர்த்துவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார்.