அரசியலைத் தாண்டிய மக்கள் போராட்டத்தின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்! - சிவசக்தி ஆனந்தன்

ஆசிரியர் - Admin
அரசியலைத் தாண்டிய மக்கள் போராட்டத்தின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்! - சிவசக்தி ஆனந்தன்

தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

'இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சிகாலத்தில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் வழங்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியாவில் நடமாடும் சேவை ஊடாக அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 6ஆம் திகதி 8 சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது என்று ஜனாதிபதி சவால் விட்டு பேசியுள்ளார்.

அங்கே கலந்து கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்திற்கு கீழ் எட்டுப் பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது என்ற செய்தியினை அங்கு சொல்லாமல் கடந்த மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகல வழிகளிலும் அரசினை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எமது பிரதிநிதிகள் இவ்வாறு இருந்தால் மக்களின் காணிப்பிரச்சனை காணாமல் போன பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. ஆகவே இன்றைய மக்கள் போராட்டம் போல் தொடர்ச்சியாக அரசியல்கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு