மாநகரசபை அமர்வுகளில் கலந்து கொள்ள வி.மணிவண்ணனுக்கு தடை..

ஆசிரியர் - Editor I
மாநகரசபை அமர்வுகளில் கலந்து கொள்ள வி.மணிவண்ணனுக்கு தடை..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ,  யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்று இன்று இடைக்காலத் தடை விதித்து கட்டளை வழங்கியது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது மாநகர சபை எல்லையில் வதிவிடம் கொண்டிருந்ததாக  எதிர்மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, ஆட்சேபனையை முன்வைத்தார்.

எனினும் 2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவின் போது, உறுப்பினர் மணிவண்ணன் யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியவில்லை என மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் அடங்கிய அமர்வு, மனுதாரரால் கோராப்பட்ட இடைக்கால நிவாரணமான  இந்த வழக்கு தீர்ப்பளிக்கப்படும்வரை மணிவண்ணன் சபை அமர்விலோ வாக்களிப்பிலோ பங்கேற்பதற்க முடியாது என இடைக்காலத் தடை கட்டளையை வழங்கியது.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என  மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

அதேவேளை மற்றொரு மனு ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு (ஜெகன்) எதிராக தாக்கல் செய்யப்பட்டது. அதனை யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற குகேந்திரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது எனக் கட்டளையிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவின் ஆரம்ப விசாரணையிலேயே மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு