SuperTopAds

அரசியலில் பக்குவப்படாத கஜேந்திரகுமார்

ஆசிரியர் - Editor II
அரசியலில் பக்குவப்படாத கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரனுக்கு எதிராக ஒரு தும்புத் தடியை நிறுத்த எண்ணுகிறோம் என கஜேந்திரகுமார் கூறியமை அரசியலில் அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக மூத்த போராளியான பசீர் காக்கா என்றழைக்கப்படும் முத்துக்குமார் மனோகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நிறுத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் கட்சியின் நிலைப்பாடு என்ன என கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு கஜேந்திரகுமாரின் தும்புத்தடிக் கதை சுமந்திரன் தும்புத்தடிக்கு சமனானவர் அல்லது முன்னணியின் வேட்பாளர் முதலமைச்சர் வேட்பாளர் தும்புத்தடிக்கு சமனானவர் என்றோ மக்கள் தும்புத்தடிக்கும் வாக்களிக்கக்கூடியவர்களோ என கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில், மாகாண சபைத்தேர்தலில்  சுமந்திரனுக்கு எதிராக ஒரு தும்புத் தடியை நிறுத்த எண்ணுகிறோம் என அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் கூறியமை அரசியலில் அவர் இன்னும் பக்குவப் படவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய கூற்று மாற்றுத் தலைமை ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கிலானதா எனவும் சிந்திக்க வைக்கிறது.

பொதுவேட்பாளர் விடயத்தில் அவர் சிறுபிள்ளைத்தனமாக எடுத்த தீர்மானத்தினால் சினமுற்ற தமிழ் இனம் பொதுத் தேர்தலில் தமது நோக்கை எச்சரிக்கையாக வெளிப்படுத்தியது. சிறீகாந்தா ,ஜங்கரநேசன்,தவராஜா ,முதலான தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சக்திகள் நாவடக்கத்தை அவருக்கு கற்பிக்க வேண்டுமென எதிர் பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.