குச்சவெளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதில் இழுபறி!- தமிழரசு உறுப்பினர்கள் முரண்டு.

முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து குச்சவெளி பிரதேச சபையை ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் குச்சவெளி பிரதேச சபையை இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை தோன்றியுள்ளது.
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் தமிழரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சில நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலை தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வது என்று, மூதூர் பிரதேச சபையின் முதல் இரண்டு வருடங்களை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப- தவிசாளர் பதவியை வழங்குவது என்றும் இறுதி இரண்டு வருடங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப- தவிசாளர் பதவியையும் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்களை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப -தவிசாளர் பதவியை வழங்குவது என்றும், இறுதி இரண்டு வருடங்களுக்கு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப- தவிசாளர் பதவியையும் வழங்குவது என்றும் இணங்கியே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், குச்சவெளி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க போகப் போவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து செவ்வாய்க்கிழமை (27) கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை .