SuperTopAds

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள்; மேய்ச்சல் தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி - ரவிகரன் எம்.பி

ஆசிரியர் - Editor I
வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள்; மேய்ச்சல் தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி - ரவிகரன் எம்.பி

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றபோதிலும் அவற்றுக்கான மேய்ச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனவே மேய்ச்சல் தரவைக்காக காணிகளை ஒதுக்கிக்கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் அவர் இதன்போது வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார். 

பாராளுமன்றில் 12.03.2025 நேற்று இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 100,000 கால்நடைகளும், மன்னார் மாவட்டத்தில் 140,000கால்நடைகளும், வவுனியா மாவட்டத்தில் 130,000கால்நடைகளுமாக, வன்னிப் பகுதியில் மொத்தமாக ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றன. 

இவ்வாறு பெருமளவான கால்நடைகள் காணப்படுகின்றபோதும் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல்தரவை இல்லாத சிக்கலான நிலமை காணப்படுகின்றது. 

இதனால் கால் நடைகளை வீதிகளின் இருமருங்கிலும் மேயவிடவேண்டிய நிலை காணப்படுவதாக கால்நடைவளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் தரவையின்மையால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெருத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

எனவே இந்த சிக்கல் நிலமைகளைக் கருத்தில்கொண்டு கால்நடைகளுக்குரிய மேய்ச்சல்தரவை நிலங்களை ஒதுக்கிக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.