வெடுக்குநாறிமலை சிவராத்திரி இரவில் இல்லை!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் காவல்துறையால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் காவல்துறையால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6 மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்ப்பட்ட 8 பேர் அடாவடியான முறையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்டபோது, இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். 6 மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் ஆலயத்திற்கு வெளியே சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.