SuperTopAds

வேலணையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ஆசிரியர் - Admin
வேலணையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

வேலணை, செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

வேலணை, செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் இன்று (16) உயிரிழந்துள்ளார். 

இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில் - 

சம்பவம் இடம்பெற்ற போது எவரும் வீட்டில் இல்லை. குறிப்பாக இன்று மாலை குறித்த சிறுவன், அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். 

இதன்போது தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த சிறுவன் முற்பட்ட வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது. 

வீட்டுக்கு உறவினர்கள் வந்த போது சம்பவத்தை அவதானித்து சிறுவனை சிகிச்சைக்காக வேலணை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

ஆனாலும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

இதேவேளை, சிறுவனின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.